Friday, June 24, 2016

கண்கள் இரண்டிலொன்றைக் குத்திக் காட்சி கெடுத்திடலாமோ

கடந்த ஒரு வாரமாக நான் செம வெட்டி. வரிசையாக படங்களாய் பார்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். அதில் என்னை நெகடிவாக பாதித்தது 'இறைவி' படமும் 'ஒரு நாள் கூத்து' என்ற படமும். 

இறைவி எடுத்துக் கொண்டால் பெண்கள் ஆண்களிடம் சிக்கித் தவிக்கும் பழைய கதையை புதிய கோணத்தில் சொல்லுகிறார்கள். ஆனால் பாலச்சந்தர் படங்களில் வரும் பெண்களுக்குரிய துணிச்சலோ சுய புத்தியோ இல்லாத மிக சராசரியான பெண்கள். குடிப்பது, அடிப்பது, காம கோப தாபங்களில் மிருகத்தனமாக நடந்து கொள்வது என்று வாழும் சில ஆண்கள். அவர்களை மணந்த காரணத்தினால் சின்னாபின்னமாய் போகும் சில பெண்கள்.
அதிலும் SJ Surya பாத்திரம் மிக மோசம். ஒரு கலைஞன் என்றால் அவன் எவ்வளவு கீழ்தரமானவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று டைரக்டர் நினைத்திருப்பார் போலும். படத்தில் அனைவர் வாழ்க்கையும் சிதைந்து போவதற்கு காரணம் SJ சூர்யாவின் பாத்திரத்தால் தான். படு சுயநலமான கதாபாத்திரம்.
உடைந்த மனிதர்கள் உடைந்தவர்களாவே வாழ்ந்து முடிப்பதைக் காட்டுவது தான் இறைவி. அவர்கள் மீண்டு வாழ்க்கையில் வென்று காமிப்பதாக ஒரு முடிவு வைத்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும். என்ன செய்வது... கண்ணீர், இரத்தம், குடி மற்றும் வயிற்றைப் பிசையும் வன்முறை இவை அனைத்தும் சேர்ந்து இருள் சூழ்ந்த சினிமா எடுத்தால் தான் தேசிய விருது தருகிறார்கள்!

ஒரு நாள் கூத்து படத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக மூன்று பெண்கள் படும் அவஸ்த்தையை சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இங்கேயும் அந்த டைரக்டருக்கு வித்தியாசமான கிளைமாக்ஸ் அமைக்க வேண்டும் என்ற ஆசையின் விளைவு - முடிவு மகா சொதப்பல்! குடும்ப மற்றும் சமூக வழக்கங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க திருமண வயதில் இருக்கும் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து நொந்து போவதற்கு சான்ஸ் அதிகம்.

இதெல்லாம் போதாதென்று இந்த சல்மான் கான் கமெண்ட் வேறு. இரத்தம் கொதிக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட ஆண் கர்வம் ஆட் டிப் படைப்பதைப் பார்த்தால் பதைக்கிறது. அது போன்றவர்களை ஆதரிப்பவரைப் பார்த்தால்... சரி விடுங்கள். No bad words.
காலப் போக்கில் எல்லாம் மாறி ஒரு நல்ல சமுதாயம் உருவாகும் என்று நம்புவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

No comments:

Post a Comment